சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், அதனால், ஆணவக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் படி இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி, இந்த வழக்கில் கைதான பத்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால், சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் இன்று சுவாதியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னாள் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி இன்று நடைபெறும் விசாரணையில் உண்மையை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.