தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், இரு தன்பாலின உறவு தம்பதியர் தங்களின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தரப்பு வாதத்தை நீதிபதிகள் கேட்டனர். பின்னர் மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணிக்கும் நோட்டீஸ் அனுப்பினர். 4 வாரங்களுக்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மனுவை தாக்கல் செய்தவர்களில் ஓர் இணையரான சுப்ரியோ சக்ரபர்த்தி, அபாய் தங். இவர்கள் ஹைதராபாத்தில் வசிக்கின்றனர். மற்றொரு ஜோடி ஃபிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ். இரண்டு தம்பதிகளுமே, “திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் 377-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. 158 வருட பழமையான இந்தச் சட்டம் தன்பாலின உறவு கிரிமினல் குற்றம் என்று பட்டியலிட்டிருந்தது. 377 நீக்கத்திற்குப் பின்னர் பரவலாக சமூகத்தில் LGBTQ சமூகத்தினர் மீதான பார்வை மாறிவருகிறது. இந்நிலையில்தான் தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் மனுவில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.