ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த ஒடிசா பெண் தற்கொலை; சங்கரன்கோவில் அருகே பரிதாபம்

சங்கரன்கோவில்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் வேதனையில் ஒடிசாவை சேர்ந்த பெண் சங்கரன்கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் மாண்டல். இவரது மனைவி ஸ்ரீ  தனாமாஞ்சி (22). அஜய் குமார் மாண்டல் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அஜய்குமார் மாண்டல், பெருமாள் பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அவரது மனைவி ஸ்ரீ தனாமாஞ்சி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ தனாமாஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீ தனாமாஞ்சி ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி ரூ.70 ஆயிரம் இழந்ததும், இதனால் மன வேதனையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.