சின்ன இருமல் கூட இப்போது பெரிய செய்தியாகிறது – கமல்

விஜய்சேதுபதி நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் டிஎஸ்பி. அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி நடித்துள்ளார். பொன்ராம் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இப்போது மீடியாக்கள் பெருகி விட்டது. அன்பும் கூடிவிட்டது. அதனால் சாதாரண இருமல் கூட பெரிய செய்தியாகி விடுகிறது. என்றாலும் மக்களின் அன்பால் நான் மீண்டும் வந்திருக்கிறேன். இப்போதல்ல பல விபத்துகளை சந்தித்திருக்கிறேன். அவற்றிலிருந்து மக்களின் அன்பு என்னை காப்பாற்றி இருக்கிறது.

ஹிந்தி படங்கள் இங்கு அதிகம் வராததால் எனக்கு திலீப் குமாரை தெரியாது. சாகர் படத்தில் நடிக்க சென்றபோது முதலில் கங்கா யமுனா படத்தை பாருங்கள் என்றார்கள். பார்த்தேன். அப்போதுதான் திலீப் குமார் யார் என்பது தெரியும். அவரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரகசியமாக சென்று அவர் முன் மண்டியிட்டு முத்தம் கொடுத்து திரும்புவேன். அதேபோன்று இன்று தம்பி விஜய்சேதுபதி எனக்கு மரியாதை செய்கிறார். நாளை விஜய்சேதுபதி முன்பு மண்டியிட இன்னொரு நடிகர் வருவார். இது காலத்தின் சுழற்சி, கலையின் மேன்மை.

இவ்வாறு கமல் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.