ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி உட்பட 6 சிறுமிகள் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றது காப்பகத்தின் நிர்வாகிகளுக்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த காப்பக நிர்வாகிகள் சித்தோடு போலீஸில் புகாரளித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

ஈரோடு

அதன் பலனாக காப்பகத்தின் அருகில் உள்ள பெருமாள் மலையில் 3 சிறுமிகளும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 சிறுமிகளும் என தப்பிச்சென்ற 6 சிறுமிகளையும் கண்டுபிடித்து ஈரோடு கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள அரசின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

ஆர்.என்.புதூர் அரசு காப்பகத்தில் தங்குவதற்கு முறையான வசதிகள் இல்லாததால், 6 சிறுமிகளும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காப்பகத்தில் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டார்களா? அங்கு அடிப்படை வசதிகளில் என்னன்ன குறைபாடு உள்ளது என்பதை பிடிபட்ட 6 சிறுமிகளிடமும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.