காரில் இருந்த அமெரிக்க பெண் தொழிலதிபர் முன் ஆபாச ‘சேட்டை’ செய்த டிரைவர் கைது: ஒரு மணி நேரத்தில் தூக்கிய மகாராஷ்டிரா போலீஸ்

மும்பை: அமெரிக்க பெண் தொழிலதிபர் முன்பாக காரில் ஆபாச சேட்டைகளை செய்த கார் டிரைவரை மகாராஷ்டிரா போலீசார் ஒரு மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த 40 வயதான பெண் தொழிலதிபர் ஒருவர், தனது பணி நிமித்தமாக இந்தியா வந்துள்ளார். அவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்தேரி மேற்கு பகுதியில் தனது வேலையை முடித்துக் கொண்டு தனியார் காரில் மும்பைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை யோகேந்திர உபாத்யாய் (40) என்பவர் ஓட்டினார். டிரைவரின் சீட் அருகில் உள்ள முன்பக்க இருக்கையில் அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். காரின் பின்னிருக்கையில் அமெரிக்க பெண்ணின் நண்பர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவராக குறிப்பிட்ட இடங்களில் இறங்கிவிட்டனர். அந்த காரில் அமெரிக்க பெண்ணும், கார் டிரைவர் மட்டுமே இருந்தனர். இதற்கிடையில், காரை வேகமாக ஓட்டிச் சென்ற டிரைவர், காரில் அமர்ந்தவாறே ஆபாச செய்கைகளில் (தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி) ஈடுபடுவதை அந்தப் பெண் பார்த்தார். அதிர்ச்சியடைந்த அவர், ஜே.பி.ரோட்டில் காரை நிறுத்தச் சொல்லி, அங்கேயே இறங்கினார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் கார் டிரைவரின் ஆபாச செய்கை குறித்து தெரிவித்தார்.

தகவலறிந்த டி.என்.நகர் போலீசார், கார் டிரைவர் யோகேந்திர உபாத்யாயை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காரில் ஆபாச செய்கைகளை காட்டிக் கொண்டு வந்த கோரேகான் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் யோகேந்திர உபாத்யாய் (40) மீது, ஐபிசி பிரிவுகள் 354ஏ, 509, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.