ஜெகன் மோகன் ரெட்டி சகோதரியை கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்… வீட்டுக்காவலில் தாயார்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா சென்ற காரை, தெலங்கானா மாநில போலீசார் கிரேன் மூலம் கொக்கி போட்டு, அவர் உள்ளே இருக்கும் போதே இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற பெயரில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காரில் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து வெளியே வரும்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம் போலீசார் கேட்டனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது

இதை அடுத்து கிரேன் இழுவை வாகனத்தை கொண்டு வந்த போலீசார், ஒய்.எஸ்.ஷர்மிளா காருக்கு உள்ளே இருக்கும் போதே, காரை கொக்கி போட்டு இழுத்துச் சென்றனர். இது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், காருக்குள்ளே இருந்து வெளியே வரும்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் காரின் கதவை அவர் திறக்கவில்லை. இதை அடுத்து டூப்ளிகேட் சாவி செய்யும் நபரை வரவழைத்த போலீசார், ஒருவழியாக காரின் கதவை திறந்து, ஒய்.எஸ்.ஷர்மிளாவை வெளியே வர வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் ஒய்.எஸ்.விஜயலட்சுமி, மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவை பார்க்க வீட்டில் இருந்து புறப்பட்டார். இதை அறிந்த போலீசார், அவரை வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.