திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பறந்த சம்மன் – நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவைச் சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான
ஆ.ராசா
, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த சோதனைகளின் அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

7 வருடங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு திமுக எம்.பி ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த மாதம், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில்
சிபிஐ
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. குற்றம் சாட்டப்பட்ட காலத்தில், வருமானத்தை விட 579 சதவிகிதம் அதிகமாக, 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆ.ராசா சொத்துகளை குவித்துள்ளதாக குற்றப் பத்திரிகையில் சிபிஐ தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்பி ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.