திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் தகவல் மையத்தின் பெயர்ப் பலகை இந்தியில் எழுதப்பட்டிருப்பதை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அவசர அவசரமாக அகற்றப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள தகவல் மையம் பகுதியில், ‘சகயோக்’ என எழுதப்பட்டிருந்தது. இந்தியிலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் அதே வார்த்தை எழுதி வைக்கப்பட, பயணிகள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தை சேர்ந்த பலர் அர்த்தம் தெரியாமல் திண்டாடினர்.
திருப்பூர் ரயில் நிலையத்துக்கு, பனியன் நிறுவனங்களில் பணியாற்ற நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வடமாநிலங்களில் வந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் வசதிக்கேற்ப, தகவல் மையத்தின் பெயர் ’சகயோக்’ என இந்தி, ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் என ஒரே மாதிரியாக எழுதி வைத்ததை தொடர்ந்து, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பதாகை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மத்திய அரசு அப்பட்டமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்து, பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதை தொடர்ந்து, ’இந்தி பதாகை’ விவகாரம் பல்வேறு தரப்பிலும் பேசு பொருளானது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த, சேவை மையம் பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக ’சகயோக்’ என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில், உள்ளூர் மொழியான தமிழில்தான் அறிவிப்பு பலகைகள் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது.
இது புதிய வகை இந்தித் திணிப்பாகும். புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித் துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்” என ரயில்வே அமைச்சருக்கு தனது ட்விட்டர் பதிவை ராமதாஸ் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்ப, இன்று காலை ரயில்வே அதிகாரிகள் திடீரென, சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையை கிழித்து அகற்றினர். இந்நிலையில், இந்த வேலையை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.