துரியோதனன், சூர்ப்பணகை யார்?.. பாஜக – திரிணாமுல் எம்எல்ஏக்கள் மோதல்

கொல்கத்தா: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து மகாபாரத கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு திரிணாமுல் எம்எல்ஏ பேசியதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் கூறுவதால், மேற்குவங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சபித்ரி மித்ரா முகர்ஜி, தனது தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘எனக்கு எதிராக சட்டசபைக்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியை துரியோதனன் (மகாபாரத கதாபாத்திரம்), உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (துரியோதனின் சகோதரன்) என்று ஒப்பிட்டு பேசிதாக கூறுகின்றனர்.

நான் அவ்வாறு பேசவில்லை; அப்படியிருக்கையில் எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து நான் எதுவும் கூறவில்லை. பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சூர்ப்பணகையுடன் (ராமாயண கதாபாத்திரம்) ஒப்பிட்டு கீழ்த்தரமாக பேசினர்’ என்று கூறினார். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில், ‘எங்கள் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசும் கலாசாரம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் தான் உள்ளது.

மோடி, அமித் ஷா குறித்து எம்எல்ஏ சபித்ரி மித்ரா பேசியது அதிர்ச்சியளிக்கிறது. அவரது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியே, அத்தகைய மொழியைப் பயன்படுத்துவதால், அவரும் அதேபோல் பேசியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.