திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் பிவின். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுமியை தன்னுடைய வீட்டு மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்த பின்னர், அந்த சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிவின் அந்த சிறுமியை தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லையென்றால் புகைப்படங்களை வெளியில் காண்பித்து விடுவேன் என்று மிரட்டி அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார்.
நாளடைவில், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, தலைமை காவலர் லோகேஸ்வரி இது சம்பந்தமாக போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிவினை கைது செய்தார்.