நேற்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கியா பின்னர் இவ்விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது,
“புத்தக கல்வியால் பெறப்படும் அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதையும் தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப்படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் மட்டுமே உங்களுடைய முடிவு கிடையாது. உங்கள் திறமையை மேற்கொண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது, அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 25 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்த நாடாக நாம் இருப்போம். அதுமட்டுமல்லாமல், நாம் அனைவரும் போட்டி நிறைந்த உலகில் இருக்கிறோம். இதில் சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று தான் முன்னேற வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. அதேபோல், திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும். இதற்காக திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கத்தில், பிரதமர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதேபோன்று, வடகிழக்கு மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக இணைப்பதற்கு மாநில முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன்” என்று ஆளுநர் தெரிவித்தார்.