நாடு முழுவதும் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை பெறும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகள் 24 மணி நேரம் செயல்படாது.
நாட்டில் செல்போன் சிம்கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிம் ஸ்வாப் மோசடி என்பது பரவலான ஒன்றாக மாறிவிடுகிறது. இந்த மோசடி மூலம் வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை திருடி, அவர்களின் ஓடிபி, மெசேஜ்கள் போன்றவற்றை களவு செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதை வைத்து பெரும் பண மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இதைத் தடுக்கும் விதமாக, நாட்டில் இனி புதிய சிம்கார்டுகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு கிடைத்த 24 மணி நேரத்திற்கு அந்த சிம் வேலை செய்யாது. அதாவது, புதிய சிம்மை வைத்து முதல் 24 மணி நேரத்தில் இன் கம்மிங், அவுட் கோயிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை செயல்படுத்த முடியாது.
புதிய சிம்கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், பழைய பழுதான சிம்கார்டுகளுக்காக புதிய சிம் கார்டுகள் வாங்கியவர்கள், எண் மாற்ற புதிய சிம் பெற விரும்பும் நபர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் புதிய சிம் கார்டு வாங்கிய 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர் சரிபார்ப்பை தொலைத்தொடர்பு துறை செய்யும்.
புதிய சிம் கார்டுக்கான கோரிக்கை வாடிக்கையாளரிடம் இருந்து வந்துள்ளதா என்ற சரி பார்க்கும் போது, கோரிக்கையை வாடிக்கையாளர் இல்லை என்று நிராகரித்தால் புதிய சிம் கார்டு செயல்படாது. இவ்வாறு சரி பார்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதால் மோசடிகள் குறைக்கப்படும் என தொலைத்தொடர்பு துறை நம்புகிறது.