உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வன் நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான கதையுடன் மீண்டும் சீரியல் உலகை கலக்கி வருகிறார். 'கோலங்கள்' சீரியலை இயக்கி பிரபலமான அவர் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியலை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் கதாநாயகி மற்றும் இதர பெண்களின் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பல குடும்ப பெண்களை கவர்ந்தது. தற்போது எதிர்நீச்சல் தொடரும் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பான கதையம்சத்துடன் பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பெருமையாக பேசியுள்ளார். இயக்குநர் திருச்செல்வத்தின் நண்பர், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதன் மூலம் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ரஜினிகாந்தை திருச்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 'எதிர்நீச்சல் சீரியல் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த சீரியலை எனது குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்' என்று கூறி ரஜினிகாந்த் திருச்செல்வத்தை பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் திருச்செல்வமே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.