சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: காங்கிரஸ் எம்பி சசி தரூர் பதிலளிக்க உத்தரவு!

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதை அடுத்து, சுனந்தா புஷ்கர் வயிற்றுப் பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துக்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டனர். அதில், சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம் தான் காரணம் என உறுதிப்பட தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசி தரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும், அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டு உள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498 – ஏ, 306 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், தீர்ப்பு அளிக்கப்பட்டு 15 மாதங்கள் ஆன நிலையில், சசி தரூர் விடுதலையை எதிர்த்து, தற்போது, டெல்லி போலீசார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளனர்.

இன்று இந்த வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல் முறையீட்டு வழக்கு தொடர்பாக சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.