பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி, குஜராத் சட்டபேரவையில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற இடங்களில் 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்ட வாக்குபதிவில் சராசரியாக 60% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், #Gujrat_Boycott_BJP என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இரவு 8:15 நிலவரப்படி, இந்த ஹேஷ்டேக்கின் கீழ் மொத்தம் 26.5 k ட்விட்டர் பதிவுகள் இடப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமாக, மக்களே எனக்கு 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள்.. நாட்டின் மொத்த கருப்பு பணத்தையும் ஒழித்து விடுகிறேன் என்று மோடி கூறினார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதேபோன்று, 21 நாட்கள் அவகாசம் கொடுங்கள்… கொரோனாவை இந்தியாவை விட்டே விரட்டி விடுகிறேன் என்று மோடி கூறினார். ஆனால் அந்த குறிப்பிட்ட கால அவகாச்த்தில நாட்டின் கொரோனா எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இப்படி தான் பிரதமர் மோடி பொய்களை பேசி 133 கோடி இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி வருகிறார் என்று ஒரு பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக ஆ்ட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வை விமர்சித்து கேலி சித்திரம், மோடியின் பேச்சுக்கு வடிவேலு ரியாக்ஷன் கொடுக்கும் மீம்ஸ், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் வாக்களியுங்கள் என்பன போன்ற பல்வேறு பதிவுகள் #Gujrat_Boycott_BJP என்ற ஹேஷ்டேக்கின் பதிவிடப்பட்டு, அது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.