தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால்

காஷ்மீரில் இந்து பண்டிட்கள் அனுபவித்த கொடுமை பற்றி வெளியான படம் தி காஷ்மீர் பைல்ஸ். பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்த படத்தை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டினார். பல மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு கொடுத்தது.

இந்த படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியிடப்பட்டது. திரைப்பட விழாவின் நிறைவு நாளில், “தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் பிரசார திரைப்படம்” என சொல்லி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நடாவ் லேபிட். அது பெரும் விவாதத்தை எழுப்பி இருந்தது. அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருந்தது.

இஸ்ரேல் இயக்குனரின் கருத்துக்கு பதலளித்து காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது எனக்கு புதிது அல்ல. ஏனென்றால் நாட்டை பிளவுப்படுத்த விரும்பும் சக்திகள் இப்படி சொல்வது வழக்கம். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால் இந்த கருத்து சொல்லப்பட்டுள்ள இடம்தான். இந்திய அரசு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் இது நடந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க விரும்புபவர்கள் சொல்லியுள்ள கருத்து இது. இந்தியாவில் வாழ்ந்து வரும் சிலரும் எதிராக கருத்து சொல்லி உள்ளனர். இவர்கள் எல்லாம் யார்?

இது பிரசார படம் என சொல்பவர்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் வரும் ஒரு சிங்கிள் ஷாட், வசனம் மற்றும் நிகழ்வுகள் எதுவும் நிஜம் அல்ல என யாரேனும் நிரூபித்தால் நான் சினிமா இயக்குவதை நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.