தி காஷ்மீர் பைல்ஸ் விவகாரம்..இஸ்ரேல் இயக்குநர் மன்னிப்பு..ஆனால் அதே சமயம்..?

கோவாவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய 53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து திரைப்படத்தை விமர்சித்த அவரது கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது விமர்சனத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நடாவ் லபிட் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லபிட் வெட்கப்பட வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் சாடியுள்ளார்.

நடாவ் லபிடுக்கு ஓர் திறந்த மடல் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் இதனை ஹீப்ரூ மொழியில் தாம் எழுதவில்லை எனவும், இந்தக் கடிதம் சற்று நீளமானது என்பதால் ‘நீங்கள் வெட்கப்பட வேண்டும்’ என்பதே இதன் சாராம்சம் என்பதை முதலில் கூறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணங்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “விருந்தினரை கடவுள்கள் என இந்திய கலாசாரம் கூறுகிறது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் தலைவராக உங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றை நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பைக் கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும், இஸ்ரேலின் தூதராக என்னையும் அழைத்தார்கள் என நினைக்கிறேன்.

படத்தைப் பார்த்தபோது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இது பார்ப்பதற்கு எளிதான படம் அல்ல. இஸ்ரேலிலும் இப்படம் காட்டப்பட்டது என்று நினைக்கிறேன். பயங்கரமான விஷயங்களால் பாதிக்கப்பட்ட யூதர்களான நாம் மற்றவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி நடாவ் லபிட் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ‘‘பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காஷ்மீரி பண்டிட்களை அவமதிப்பது எனது நோக்கமல்ல. எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

ஆனால் அதேசமயம் எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். நான் என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். மதிப்பு மிக்க ஒரு திரைப்படவிழாவில், இத்தகைய வெறுப்புணர்வை தூண்டும் படங்கள் மற்றும் சிறந்த தரமில்லாத இத்தகைய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்க கூடாது. நான் இதை மறுபடியும் மறுபடியும் சொல்வேன்.

பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்; திண்டிவனத்தில் பரபரப்பு!

பாதிக்கப்பட்டவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. அரசியல் பிரச்சனை குறித்தோ அல்லது படுகொலைகளை நியாயப்படுத்தியோ நான் பேசவில்லை. படத்தில் காட்டப்பட்டுள்ளவை குறித்தே கருத்து தெரிவித்து இருக்கிறேன். இதை நான் 10 ஆயிரம் முறை கூட சொல்வேன்.

செக் வைத்த இந்தியா..கடுமையான கோபத்தில் சீனா.!

படத்தில் ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்பு மட்டுமே முதன்மையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. படம் குறித்த எனது கேள்வி என்பது, காஷ்மீரில் நடைபெற்ற சம்பவங்களை குறித்து அல்ல. மாறாக காட்சிபடுத்தப்பட்டவை குறித்தே என்பது சம்பந்தபட்ட திரைப்பட இயக்குநருக்கு நன்றாக புரியும் என்று நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.