நாளை முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. கலெக்டர் உத்தரவு..!

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலின் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வரும் 6-ம் தேதி கோவிலின் சுவாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிச்சாலை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் நாளை (டிச.2-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.