வெண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஆனந்த வேலை என்பவர் கொத்தனார் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், தனுஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளது.
இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியே அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் இறங்கி வந்த தனுஸ்ரீ எதிர்பாராத விதமாக வெண்ணீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்தாள்.
இதில் உடல் முழுவதும் காயம் அடைந்த தனுஸ்ரீ ராஜேஸ்வரி உடனடியாக மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.