தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகள், மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும், கோவை மாவட்ட அஇஅதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 2) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் முதல்வரும், கழக இடைக்கால பொதுச் செயலாளருமான
தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர். மேலும் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டது கவனம் பெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியின் உத்தரவிற்கு இணங்க கோவை மாவட்டமே இங்கு திரண்டு வந்திருக்கிறது. 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்தார். தற்போதுள்ள திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப நாம் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அடிக்கல் நாட்டிய திட்டங்களை எல்லாம் திமுக அரசு தொடங்கி வைத்து நல்ல பெயர் வாங்கி கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் விலை ஆகியவற்றின் உயர்வால் மிகுந்த கொந்தளிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்த போராட்டத்தை பார்த்தாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் கோவை மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது? எந்த புதிய திட்டங்களை ஆவது கொண்டு வந்தார்களா? கோவை மட்டுமல்ல தமிழக மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? எனக் கேள்விகள் எழுப்பினார்.
வரும் 9ஆம் தேதி பேரூராட்சியில் 12ஆம் தேதி ஊராட்சியில், 13ஆம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் விலை உயர்வு மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.