புதுடெல்லி: போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று மத்திய அரசு எப்எம் ரேடியோ சேனல்களை எச்சரித்துள்ளது.
இந்திய இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி சிறுவர்கள் வரையில் போதைப் பழக்கம் பரவி உள்ளது. போதைப் பழக்கத்துக்கு உள்ளாகும் இளைஞர்கள் வன்முறை நிகழ்வில் ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் இத்தகைய தவறான பாதைக்கு செல்வதற்கு இந்திய திரைப்படங்கள் உந்துசக்தியாக உள்ளன.
பெரும்பாலான இந்திய திரைப்படங்களில் நாயகன் வன்முறையில் ஈடுபடுவது, பெண்களை கேலி செய்வது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை பெருமிதமாக முன்வைக்கப்படுகின்றன.
சினிமாப் பாடல்கள் இந்தத் தவறான நடவடிக்கைகளை போற்றிப் பாடுகின்றன. இதனால், திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள், இத்தகைய தவறான நடத்தைகளை நாயகத்துவமாக கருதி செய்கின்றனர்.
சட்ட நடவடிக்கை
சமீபத்தில், சில இந்திய எப்எம் ரேடியோ சேனல்கள் மது, போதைப் பழக்கம், வன்முறை, துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் பெருமிதமாக முன்வைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்துள்ளன. இது மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து, போதைப் பழக்கம், ஆயுதக் கலாச்சாரத்தை பெருமிதமாக முன்வைக்கும் உள்ளடக்கங்களை ஒலிபரப்பக் கூடாது என்றும் மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எப்எம் சேனல்களுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.