'போதை பொருளை பயன்படுத்தியதாக எழுதிக்கொடு’ – டார்ச்சர் செய்த டீச்சர் உயிரை விட்ட மாணவர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ், இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய 2 மகன்கள் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் 12ஆம் மற்றும் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் தற்போது வரை இருவரும் அந்த பள்ளியில்தான் படித்து வருவதாக தெரிகிறது.

மகேஷின் இளைய மகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும் போது சிறிது நேரம் மேசையில் படுத்துள்ளதாகவும், இதை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆசிரியர் தன்னை அடித்தது குறித்து தர்ஷன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று பள்ளியின் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் திங்கட்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு செவ்வாய், புதன்கிழமை விடுமுறை எடுத்து விட்டு நேற்று வழக்கம்போல் மூத்த மகன் கவின் குமார் பள்ளிக்கு சென்றுள்ளான்.

அப்போது, பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன், மாணவன் கவின்குமாரை அழைத்து நீ பள்ளியில் போதை வாஸ்துக்களை பயன்படுத்துகிறாய் என்று கூறி, சக மாணவ, மாணவிகள் முன்பு சட்டைய பிடித்து இழுத்துக் கொண்டு போய் சரமாரியாக அடித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு கையெழுத்து இட சொல்லி உள்ளார்.

தொடர்ந்து பள்ளியின் நிர்வாகம் சார்பில் கவின்குமாரின் பெற்றோருக்கு போதை வஸ்துகளான புகையிலை பொருள்களை அவரது மகன் பயன்படுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு அழைத்துள்ளனர். பின்னர் கவின் குமாரின் பெற்றோர் பள்ளிக்கும் சென்றுள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை மூத்த மகன் கவின் குமார் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக விட்டின் உள்ளே இருக்கும் குளியலறைக்கு குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்று விட்டு வெகுநேரமாகியும் அறை கதவை, தந்தை மகேஷ் தட்டியுள்ளார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அறை ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். 

தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.

அறையில் உள்ள மின்விசிறியில் மூத்த மகன் கவின் குமார் வேட்டியால் தூக்கில் தொங்கியுள்ளதை கண்டு தந்தை மகேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, கதவை உடைத்துக்கொண்டு மாணவனை மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், கவின் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து மாணவனின் தந்தை கூறியபோது,”கவின்குமாரும் அவரது தம்பியும் ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த வாரம் தம்பி பாடம் நடத்தும்போது தூங்கியதாகவும் இதனால் ஆசிரியர் ஒருவர் அடித்ததால் நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.

இதையடுத்து, கவின்குமார் செவ்வாய்கிழமை, புதன்கிழமை பள்ளிக்கு செல்லாமல் வியாழக்கிழமையான நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் கவின் குமார் பள்ளியில் போதை வஸ்துகளை பயன்படுத்தியதாக கடிதம் ஒன்றை எழுதிதர சொல்லி வற்புறுத்தி, கவின் குமாரை அடித்துள்ளார். 

உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளியில் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் கவினை மாணவனின் சட்டையை பிடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.  உடற்பயிற்சி ஆசிரியர் சட்டையை பிடித்து இழுத்து சென்று அடித்து அவமானபடுத்தியதால் கவின் தற்கொலை செய்துகொண்டார்” என்றார்.

தன் இளைய மகனை அடித்தது குறித்து கேட்டதற்கு தன் பெரிய மகன் மீது பொய்யான புகாரை கூறி அடித்ததாகவும் கூறினார். இதனால், நெல்லை நாடார் பள்ளியின் நிர்வாகம் மீதும், உடற்பயிற்சி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்ந்து, உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால், எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படமால் இருக்க பள்ளியின் நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அளித்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அங்கிருந்து அழைத்து சென்று வருகின்றனர்.

மேலும், சைதாப்பேட்டை சரக உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசில் தலைமையில் பள்ளியின் முன்பு சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.