மூளை சாவு அடைந்த கட்டடத் தொழிலாளி; உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள சீதாராமன்பட்டினம கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சநாதன்(53). இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

மீனவரான குஞ்சுநாதன் மீன்பிடி தடை காலங்களிலும், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத போதிலும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி குஞ்சுநாதன் கட்டட பணிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கட்டடத்தில் சாரம் கட்டிக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.‌ 

இதனையடுத்து, அவரை சக கட்டடத் தொழிலாளர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஞ்சநாதனை, அவரின் குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அவரை  பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தலையில் அடிபட்டு உள்ளதால் காப்பாற்றுவது சிரமம் என்று கூறியிருக்கின்றனர். பின்னர் குஞ்சநாதன் உடல்நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இதனால், அதிர்ந்து போன குஞ்சுநாதனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து பேசி குஞ்சுநாதனின் உறுப்புக்களைத் தானமாக கொடுக்க முடிவு செய்தனர். இதனையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் விதிகளுக்கு உட்பட்டு குடும்ப உறுப்பினர்களில் சம்மதத்தோடு, குஞ்சநாதனின் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். பின்னர் திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் உள்ள நான்கு நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ குழுவினர் மூலம் அனுப்பி வைத்தனர். இவரின் உடல் உறுப்புகள் அவர்களுக்கு பொருத்தப்பட இருக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக அவரின் பிள்ளைகள், “இறந்தாலும், எங்க அப்பா பல குடும்பத்தை வாழவைக்கப்போகிறார்” என உருக்கமாக பேசியது அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.