திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின்சார துறையில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்த சரியான பயனாளிகளின் பெயர்களை கண்டறியும் வகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெளிவான விளக்கமும் மின்சாரத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கூட்டுறவுத்துறையும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கு வைத்திருப்போர்களிடம் பாஸ் புத்தகத்தின் நகல், அதில் குடும்ப தலைவர் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது அந்த உத்தரவுக்கு மாறாக புதிய உத்தரவை கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ளது.
அதாவது, ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு படிப்படியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், சரியான பயனாளிகளுக்கு அரசின் பயன்கள் சென்றடையும் வகையில் இத்தகைய பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒரே பயனாளிக்கு அரசின் ஒரு சலுகை மட்டுமே கிடைக்கும் வகையில், ஆதார் இணைப்பு உள்ளிட்ட விவரங்களை கோரப்படுகின்றன.