சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; பிரெசிடென்ட் கோப்பையை தட்டி சென்ற இந்திய வீரர்

கெய்ரோ,

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.) சார்பில் 2022-ம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் கடந்த நவம்பர் 28-ந்தேதி தொடங்கியது.

இந்த போட்டிகள் வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதில், இந்தியா சார்பில் இளம் வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல் (வயது 18) 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் கலந்து கொண்டார்.

அவர், இத்தாலி நாட்டை சேர்ந்த டேனிலோ சொல்லாஜோ என்பவரை 16-8 என்ற புள்ளி கணக்கில் பிளே-ஆப் சுற்றில் வீழ்த்தி பிரெசிடென்ட் கோப்பையை தட்டி சென்றுள்ளார்.

அவருக்கு இந்திய விளையாட்டு கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் அக்டோபரில் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப்.பின் ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுக்கான உலக சாம்பியன்ஷிப் 2022 போட்டிகளில் பாட்டீல் கலந்து கொண்டார்.

அவர், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததுடன், 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தனது வாய்ப்பை, நாட்டின் முதல் நபராக பதிவு செய்து கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.