புதுடெல்லி: உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20-ன் தலைமைப் பொறுப்பை இந்தியா முறைப்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்வுகளை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி20 தலைமை என்பது சுழற்சி முறையில் அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. அப்படித்தான் இந்தியாவுக்கும் இந்த தலைமை வந்துள்ளது. இதற்குமுன் ஜி20 தலைமையைப் பெற்ற எந்த ஒரு தேசமும் இப்படியொரு நாடகத்தை நடத்தியதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு 2014ல் குஜராத் மாநிலம் காந்திநகரில் பேசிய எல்.கே.அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. மேடையில் பேசிய அத்வானி, மோடி ஒரு சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று விமர்சித்தார். ஜி20 தலைமைக்குப் பின்னால் உள்ள கொண்டாட்டங்களை எல்லாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்” என்றார்.
The Presidency of G20 is rotational and India’s Presidency was inevitable. Previous presidents of G20 have been USA, UK, Canada, South Korea, France, Mexico, Russia, Australia, Turkey, China, Germany, Argentina, Japan, Saudi Arabia, Italy & Indonesia…1/2
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 2, 2022
முன்னதாக ”இந்தியாவின் ஜி-20 தலைமை பொறுப்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நமது கருப்பொருள் – ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச்சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது” என்று பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.