குளிர்கால கூட்டத்தொடர் குறித்து காங். தலைவர்கள் இன்று ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான வியூகம் வகுக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்க உள்ளது. இக்கூட்டத் தொடரில், மாநில கூட்டுறவு சங்கங்களில் நிர்வாக வலுப்படுத்துதல் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், அரசு வேலை முதல் வாக்குரிமை வரை அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான வியூகங்களை வகுப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை கட்சி கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை கொறடா கே.சுரேஷ், முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிஷ் திவாரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.