தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு அருகே காமராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஈஸ்வரி என்பவர் உள்ளார்.
இப்பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னாள் மாணவர்களின் பழைய பாடப்புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டு வந்தது. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் சுமார் 250 கிலோ எடை இருக்கும்.
இந்த பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஈஸ்வரி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி, தலைமையாசிரியர் ஈஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சுமார் 250 கிலோ எடை கொண்ட பழைய பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவர்களிடம் விற்பனை செய்ததை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து,பள்ளிக்கு சொந்தமான பழைய பாடப்புத்தகங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.