மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வாழுதாவூர் சாலை சொக்கநாதன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருக்கின்றன.
இனி வரும் காலங்களில் இதுபோன்று இல்லாமல், முதியோருக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். சமூக நலத்துறை மூலம் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மற்றவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் உதவித்தொகை வழங்குவதற்கு ஆணை இருப்பதாக கூறியுள்ளீர்கள். அப்படி இருந்தால், நிச்சயமாக மாற்றத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பான திட்டங்கள் இருந்தால், அதையும் புதுச்சேரி அரசு செயல்படுத்தும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களைவிட கூடுதலாக இருக்குமே தவிர, குறைவாக இருந்தது கிடையாது.
கடந்த ஆட்சியில் திட்டங்கள் குறைந்துவிட்டது என்று குறை இருக்கலாம். அதையெல்லாம் சரி செய்து அனைத்து திட்டங்களையும் மறுபடியும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளையும் அரசு கவனத்தில் எடுத்து கொள்ளும்.
வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்ற குறை இருக்கிறது. யுடிசி பணிக்கு ஆட்கள் எடுக்கும்போது, அதில் 4 சதவீதம் வழங்க வாய்ப்பு இருந்தால் கொடுக்கலாம். ஆனால், ஒருசில துறையில் 10-க்கும் குறைவான பணியிடங்கள் எடுக்கும்போது, அப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று இடங்களை கொடுக்க முடியாத நிலை உள்ளது.
அதிகமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கொடுக்கும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அரசு நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு எந்தெந்த நிலையில் உதவிகளை செய்ய முடியுமோ, அதை அரசு செய்யும்.
மாற்றுத் திறனாளிகள் பல மாநிலங்களுக்கு சென்று கிரிக்கெட் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசு வாங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு புதுச்சேரிக்கு பெருமை தேடி கொடுக்கும் மாற்றுத் திறனாளகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அந்த நம்பிக்கை உங்களிடம் அதிகம் இருக்கிறது. எங்களுடைய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் சரியான நேரத்தில் செய்து கொடுக்கும்” என்று தெரிவித்தார்.