ஆன்லைன் ரம்மி விவகாரம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் கூறுகையில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என அண்ணாமலை தற்போது கூறுவதற்கு முன்பாகவே, நானே இந்த விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என்பதை சொல்லி இருந்தேன். அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதாலும், சட்டமன்றத்திலேயே இதற்கான ஒப்புதலை பெற்று விடலாம் என்பதாலும்தான் அரசாணை வெளியிடவில்லை. வேறு எந்த காலதாமதத்தையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவிற்கே இது ஒரு வித்தியாசமான சட்டம். அனைத்து விதமான முறையான விதிமுறைகளை பின்பற்றி தான் சட்டம் இயற்றப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.  இந்த விவகாரத்தில் நிச்சயம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம், என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.