
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பேருந்து, ரயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாலும், கார்த்திகை தீப திருவிழாவும் வருவதாலும் இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று முதல் போலீஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 6ஆம் நடைபெறும் தீபத்திருவிழாவில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
எனவே அங்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார். அனுமதிச்சீட்டு இருக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
newstm.in