தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், நாளை முதல் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 6-ந்தேதி மாலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அதன் பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக, மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.