கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசால் மாணவர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளுக்கு பயணிக்கலாம். கிராமத்திலிருந்து நகரிலுள்ள பள்ளிக்கு படிக்க வரும் ஏழை மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெற்றனர். புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.
அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழை குழந்தைகள் தினமும் ரூ.50 வீதம் செலவழித்து வந்தனர்.
இந்நிலையில். புதுச்சேரி, காரைக்காலில் சிறப்பு பேருந்து இயக்குவது தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்: “ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்க முடிவு எடுத்து செயல்படுத்தியுள்ளோம். புதுச்சேரி, காரைக்காலில் மாணவர் சிறப்பு பேருந்தில் இலவசமாக மாணவ, மாணவியர் பயணிக்கலாம். அத்துடன் மதிய உணவில் வாரம் இரண்டு நாட்கள் முட்டை தருகிறோம். அதை மூன்று நாளாக மாற்ற கல்வி அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்து செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.