இந்தியாவின் உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு துணை நிற்கும் – டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்!

ஜி-20 மாநாடு தொடர்பாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு உருவாக்கியுள்ள ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ போன்ற முக்கிய கருத்துக்களை முன்வைத்து அவர் உரையாற்றினார். 

அதில்,”2023ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. 

ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்பட உள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன். 

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும் காலநிலை மாற்றத்தைக் கையாளவும் ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.