அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலி தொல்லை அதிகரித்து வருகிறது. சுமார் இரண்டு கோடி எலிகளின் வசிப்பிடமாக நியூயார்க் நகரம் மாறி வருகிறது. வீடுகள், ரெஸ்டாரண்ட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நட்சத்திர ஓட்டல் என எலிகளின் தொல்லையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எலிகளை ஒழிக்க நியூயார்க் நகர நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நியூயார்க்கில் எலித் தொல்லை 70 % அதிகரித்துள்ளது.
மக்களிடம் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான எலித் தொல்லை புகார்கள் குவிகின்றன.இதனால் எலிகளை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டத்தை நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார். அதவாது எலிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை கொன்று அப்புறப்படுத்தவும் ஆட்கள் தேவை என மேயர் அறிவித்துள்ளார். என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையில் சேர ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டுமாம், எலிகளை துரத்துவதற்கு நல்ல உடல் ஆற்றலும், கொலையாளிக்கான நேர்த்திகளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தின் இயக்குநருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிளேக் நோய் வராமல் தடுக்க நியூயார்க் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.