
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9 மணிக்கு ரேணிகுண்டா சென்றடைந்தார். ஆந்திர ஆளுநர் விஸ்வ பூஷன் அரிச்சந்திரன் ஆந்திர துணை முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் வெங்கட் ரமண ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

இதையடுத்து திருப்பதி சென்ற குடியரசு தலைவர், பத்மாவதி சொகுசு விடுதியில் தங்கினார். இன்று காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவிலிலும், பின்னர் 9.30 மணிக்கு ஏழுமலையானையும் தரிசனம் செய்தார். மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து அலிப்பிரியில் உள்ள கோசாலையில் நடத்த கோ மந்திர பூஜையில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாடினார். குடியரசு தலைவர் வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
newstm.in