குஜராத்தில், முகமூடி அணிந்து சென்று 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட தங்கப்பதக்கம் வென்ற பிரபல மலயுத்த வீரரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் மாளவியா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘முகமூடி அணிந்த ஒருவர் தன்னிடம் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்’ என்று கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார், முகமூடி நபரை கண்டுபிடிக்க நான்கு கண்காணிப்பு படைகளை அமைத்து, அருகில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அருகிலுள்ள வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்பு வீடுகள் மற்றும் பிற பொது இடங்ளளை ஆய்வு செய்தனர்.
இதில், முகமூடி அணிந்த நபர் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா (24) என தெரியவந்தது. மாநில அளவில் 2016, 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இவர் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து நேற்று, கவுஷல் பிபாலியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை பிபாலியா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது கீழ்த்தரமான செயலால் வக்கிரமான இன்பம் அடைந்து உள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அவமானம் கருதி புகார் அளிக்க முன்வரவில்லை’ எனக் கூறினார்.