
காட்பாடியில், அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம். இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (55). இவர், தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று, லத்தேரி அருகே உள்ள ரயில் நிலையத்தில் பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையயடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பாரதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம், கணவருடன் ஏற்பட்ட சண்டையா, அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் அண்ணன் மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.