இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகள் வருகிற 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 – 2023-ம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் வாரிசுகளுக்கும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பயிற்சி படிப்புகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ‘இயக்குநர் (பொ), தொற்றுநோய் மருத்துவமனை, எண்; 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081’ என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இன்று (டிச.6-ம் தேதி) முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 12-ம் தேதிக்குள் தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.