அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்படுகின்றன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆரம்பக்கட்ட நிலவரம் எதிர்பார்த்தப்படியே ஆளும் பாஜகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. முன்னிலை நிலவரம்:
கட்சிகள் | தொகுதிகள் |
பாஜக | 130 |
காங்கிரஸ் | 42 |
ஆம் ஆத்மி | 0 |
182 தொகுதிகள்: மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும் 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க, 182 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும், 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிட்டது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கூறியது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெற்றி என்பது எங்களுக்குத் தெரியும், வரலாற்று வெற்றிக்காகவே காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.