நாட்டுக்கு பிரதமர் என்ன செய்தார்?..சந்திரசேகர் ராவ் காட்டம்!

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார்.

தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக அவர் கூறினார். இதன்மூலம் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள் என்று சந்திரசேகர் ராவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்று அவர் விமர்சித்தார். விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என்று சந்திரசேகர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.