இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4ஆவது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.
சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.
58 வயதான உஷா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ளார்.
95 வருட வரலாற்றில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்க்கு தலைமை தாங்கிய முதல் ஒலிம்பியன் மற்றும் முதல் சர்வதேசப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
newstm.in