சத்தியமங்கலம்: தாளவாடியில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு வீட்டிலேயே, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி காவியா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, இவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தாளவாடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அருள்வாடி கிராமத்திற்கு சென்றது.
பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ரங்கசாமி, கர்ப்பிணியின் வீட்டிலேயே உபகரணங்கள் உதவியுடன் பிரசவம் பார்த்தார். இதில், காவியாவுக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ரங்கசாமி மற்றும் வாகன ஓட்டுநர் அந்தோணிராஜ் ஆகியோர் சேவையை தாளவாடி மலைப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.