நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது

வாஷிங்டன்,

நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது.

இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 மணிக்கு இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரை இறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது. ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு அதன் சேவை தொகுதியில் இருந்து குழு தொகுதி பிரிக்கப்படும். சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் எரிந்துவிடும். விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் நிலம், மக்கள் மற்றும் கப்பல் வழித்தடங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையில் அது பூமிக்கு திரும்ப நாசா திட்டமிட்டுள்ளது.

சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரை இறங்க ‘ஸ்கிப் என்ட்ரி’ நுட்பத்தை பயன்படுத்தும். இது வருங்கால ஆர்டெமிஸ் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. விண்கலம் பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.