தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவன் வகுப்பில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த மாணவி மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனைக் கண்ட ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த அந்த மாணவியின் தாயாரும் மற்றொரு பெண்ணும் நேற்று பள்ளி வகுப்புறைக்குள் புகுந்து அந்த சிறுவனை செருப்பால் அடித்ததோடு சாதி பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த பிரச்னை தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவியின் தாய் மற்றும் அவருடன் வந்த பெண் மீது நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். வகுப்புறைக்குள் மாணவன் மீது தாக்குதல் நடத்திய போது ஆசிரியர்கள் யாரும் தடுக்கவில்லை, வெளியே சென்று அடிக்கச் சென்னதாக பாதிக்கப்பட்ட மாணவன் மன வேதனையுடன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.