சென்னை போலீசில் டிரோன் பாதுகாப்புப்படை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சென்னை போலீசில் டிரோன் பாதுகாப்பு படை உருவாக்கப்படுவதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்காக ரூ.3.50 கோடி செலவில் 9 டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்து டிரோன் பாதுகாப்பு படையை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரத்தியேகமான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை கண்டெய்னரில் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து தேவைப்படும் இடத்துக்கு டிரோன்கள் அனுப்பி கண்காணிக்கப்படும். இந்த டிரோன் மெரினா கடற்கரையில் இருந்து நீலாங்கரை வரை கடற்கரை ஓரத்தில் பறந்து சென்று கண்காணித்து 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு திரும்ப முடியும். அதில் உள்ள கேமரா மூலம் சம்பவ இடத்தில் இருந்து நேரடியாக காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு காண்பிக்கும். ஜி.பி.எஸ். மூலம் டிரோன்கள் செல்லும் பாதையை நிர்ணயிக்க முடியும். மேலும் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றை வேறு இடத்துக்கும் திருப்பிவிட முடியும்.
சென்னையில் பல பகுதிகள் ரோந்து போலீசார் செல்ல முடியாத பகுதிகளாக உள்ளது. எனவே போலீசார் செல்ல முடியாத பகுதிகள், புதர் பகுதிகளில் பதுங்கி இருக்கும் சமூக விரோதிகளை இந்த டிரோன்கள் மூலம் கண்காணித்து அவர்களை பிடிக்க முடியும். இது போன்ற பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுவதால் அதை தடுக்க முடியும்.அடையாறு ஆறு சென்னையில் 35 கி.மீ. தூரம் ஓடுகிறது. இந்த ஆற்றின் இருபுறமும் குறைந்தபட்சம் 10 அடி தூரம் போலீசார் செல்ல முடியாத மறைவான பகுதியாக கருதப்படுகிறது. அதே போல் கூவம், பக்கிங்காம் கால்வாயின் இருபுற பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகள் ஆட்கள் செல்ல முடியாத பகுதிகளாக உள்ளன.
இந்த பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. இந்த டிரோன்கள் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். இந்த டிரோன்களில் புதர்களுக்கு அடியில் சமூக விரோதிகள் ஒளிந்து கொண்டிருப்பதை கண்டறியும் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.