ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோயில் உட்பட 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள் அரங்கிற்குள் அணிவகுப்பு நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி அளித்த தனி நீதிபதி அந்த உத்தரவில் மாற்றம் செய்து அரங்கத்திற்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடரப்பட்ட இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் காவல்துறை அனுமதி வழங்குவதாக கூறினால் அதை ஏற்றுக்கொள்ள தயார்” என வாதாடினார்.
இதற்கு தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனக்கு மனு நகல் கிடைக்கவில்லை மனு நகல் கிடைத்த பிறகு அதற்கான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்தோம் அவர்களே தங்களது அணிவகுப்பை ரத்து செய்துவிட்டனர். இதனால் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிட்டார்.
இதனை அடுத்து மனு நகலை காவல்துறை தரப்புக்கு வழங்கும்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது குறிப்பிட்ட ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞர் ஜனவரி 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் அடுத்த விசாரணை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.