மோகன்லால் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே

பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஆனாலும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்த பின்னர் தான் இவர் அதிக அளவில் தமிழ் ரசிகர்களை சென்றடைந்தார். அதேசமயம் ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்துவரும் ராதிகா ஆப்தே மராத்தி, பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் இதுவரை நடித்துள்ளார், இந்த நிலையில் முதன்முறையாக மலையாள திரையுலகில் மோகன்லால் படத்தில் நடிப்பதன் மூலம் அடியெடுத்து வைக்க இருக்கிறார் ராதிகா ஆப்தே.

ஆம், மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி அடுத்ததாக மோகன்லாலை வைத்து இயக்க இருக்கும் படத்தில் தான் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படம் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம். முன்னதாக தற்போது மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.