திருமலை : ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 10 பேர் காயமடைந்தனர். இதனால் கார், பைக், தள்ளுவண்டிகள் சேதமடைந்தது.
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் கோஷாமஹாலில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடைபெற்றது. இதனால், சாலையோரம் அதிகளவில் தள்ளு வண்டிகளில் வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்த நிலையில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தியிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் பள்ளத்தில் விழுந்து சேதமடைந்தது.
மேலும் வியாபாரிகள், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை பள்ளத்தில் விழுந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சாலை பிளவு ஏற்பட்ட பகுதியின்கீழ் பழமை வாய்ந்த கால்வாய் இருப்பதும், அந்த கால்வாய்க்கு மேல் சிமெண்ட் சாலையும், அதற்கு மேல் தொடர்ந்து தார் சாலையும் போடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, கால்வாயில் கழிவுநீர் சென்று வந்த நிலையில் கால்வாயில் இருந்த பக்க வாட்டு சுவர் கற்களை கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதனால், கால்வாய் ஓரத்தில் தண்ணீர் சென்று மண் அரித்ததால் சாலை பிளவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதன் அருகிலேயே 2,3,4 மாடி கட்டிடங்கள் உள்ளதால் பாதிப்பு ஏதாவது உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.